புடின் 1952-ல் லெனின்கிராடில் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்புர்க்) பிறந்தார். 1970-ல் லெனின்கிராட் பல்கலைகழகத்தின் சட்டத்துறையில் நுழைந்தபோது, சோவியத் கூட்டமைப்பில் சட்டத்துக்கு இடமே இல்லை. சட்டத்துறையானது, கேஜிபி (KGB-சோவியத் உளவுப் பிரிவு), போலீஸ் மற்றும் அரசுப் பணிக்கு ஆட்களைத் தயார் செய்யும் களமாகவே இருந்து வந்தது. 1975-ல் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்னாகவே புடினை கேஜிபி தன் பக்கம் இழுத்தது. புடினும் கேஜிபி-யில் சேருவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார். தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டு இருந்ததால், கேஜிபி-யில் சேர்ந்து தன் சமுதாயத்திற்கு சேவை ஆற்ற நினைத்தார்.
சில காலம், லெனின்கிராடில் வெளிநாட்டவர்களை உளவு பார்த்தார். 1980 களின் ஆரம்பத்தில் மாஸ்கோவிலுள்ள, Elite Foreign Intelligence Training Institute அவருக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து அப்போதைய கிழக்கு ஜெர்மனியில் பணியமர்த்தப்பட்டார். தன்னுடைய 32-வது வயதில் டிரெஸ்டன் (கிழக்கு ஜெர்மனியில் ஒரு நகரம்) வந்து சேர்ந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால், கிழக்கு ஜெர்மனி சோவியத் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, கிட்டத்தட்ட 4,00,000 சோவியத் படைகளும், பல மத்திய துார ஏவுகணைகளும் இங்கு நிலைகொண்டு இருந்தது. பெர்லின் பனிப்போரின் சாட்சியாக காட்சியளித்தது.
இந்நேரத்தில் ஆயிரக்கணக்கான கேஜிபி அதிகாரிகள் கார்ல்ஸ்கோர்ஸ்டில் (பெர்லின்) உள்ள தங்கள் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியவாறு இருந்தார்கள். சோவியத் இராணுவ உளவுப்பிரிவு கிழக்கு ஜெர்மனியில் இருந்தாலும், அதைவிட மிகப் பெரிய உளவு நிறுவனமாக திகழ்ந்தது தான் கிழக்கு ஜெர்மனியின் இரகசிய போலீசான ஸ்டாசி (Stassi). உண்மையில் இவர்கள் தான் கிழக்கு ஜெர்மனி மக்களையும், போராட்டக்காரர்களையும் தீவிரமாக உளவு செய்தவர்கள்.
இவர்களை கேஜிபி அமைப்பினர் தங்கள் தேவைக்கேற்ப உபயோகப்படுத்திக்கொண்டார்கள். ஸ்டாசியைச் சேர்ந்தவர்கள் கேஜிபியினரை "நண்பர்கள்" (The friends) என்றே அழைப்பர்.
ஸ்டாசி என்னென்ன வேலைகளை கேஜிபிக்காக செய்தது என்பது பற்றியும், புடின் இங்கே என்ன செய்தார் என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவில் மேலும் விவரமாக எழுதுகிறேன்.